Monday, July 28, 2014

அகநானூற்றுடன் எழுந்த திங்கள்





"உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின்றாகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஊட்ட"
"அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்துக் கங்குல் வீச
திருந்து இழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய
நிறை வளை ஊருந் தோள் என
உரையோடு செல்லும் அன்பினர் பெறினே"


தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனைத் தலைவியின் மனநிலையில் இருந்து விவரிக்கிறான் கவிஞர் மதுரை மருதன் இளநாகனார்.

 உலகமே அதிரும் அளவு ஒரு மிகப்பெரிய கப்பலில் தலைவியைப் பிரிந்து செல்கிறானாம்  தலைவன்.
அவனுக்குக் கலங்கரை விளக்குகள் வழி காட்டுகின்றனவாம்.

அவன் மனதில் பொருளீட்டும் எண்ணம் மிகுந்து கிடக்கிறது; கடல் நீரில் அலைகளைக் கிழித்து அவனுடைய அந்த "நாவாய்" எனப்படும் மிகப்பெரிய கப்பல் மிதந்து தொலைவில் செல்கிறது;
இரவும், காற்றும் அரண்களை எல்லாம் தாண்டி இங்கே நினைவுகளாய் என்னிடத்தில் நுழைகிறது;
நான் அணிந்திருக்கிற அணிகலன்கள் நழுவிக் கீழே விழுகிறது;
எனது இந்த மன நிலையை என் தலைவனிடம் சொல்லக்கூடிய அன்பு நிறை மனிதர்கள் யாரும் என்னருகில் இல்லையே என்று வருந்திப் பாடுகிறாளாம் தலைவி. 
இப் பாடல் இயம்புகின்ற அக உணர்வுகள் பிரிவின் உணர்வுகளை ஒரு கப்பலைப் போலவும், இரவைப் போலவும், காற்றைப் போலவும் கடந்து போகிற எல்லாவற்றையும் போலவும் சொல்லித் தவிக்கிறது. 

(என்ன.. டைட்டானிக் பின்னணி கேட்கிறதா..? 
தீந்தமிழில் இல்லாத அகப் புணர்ச்சிகளையும் காதல் உணர்வுகளையுமா ஜேம்ஸ் கேமரூன்கள் சொல்லி விட முடியும்..?) 








No comments: